ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) : زينب بنت جحش
ஏழு வானங்களுக்கு மேலிருந்து பொறுப்பாளரோ சாட்சிகளோ இல்லாமல் அல்லாஹ்வே நடத்திவைத்த திருமணம்தான் அன்னை ஸைனப் (ரலி) அவர்களுக்கும் நபியவர்களுக்கும் நடந்த திருமணம். ஹிஜ்ரத்திற்கு 30 வருடங்களுக்கு முன் பிறந்த அன்னையவர்கள் தனது சகோதரர் அப்துல்லாஹ்வின் அழைப்பின்பேரில் இஸ்லாத்தில் இணைந்தார்கள். நபியவர்களின் தந்தைவழி மாமியாரின் மகளான அன்னை ஸைனப் (ரலி) ஒளுயூஞ அவர்களை நபியவர்கள் தனது வளர்ப்பு மகனான ஸைத் பின் ஹாரிஸஷுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். எனினும் அவர்கள் வாழ்கை நீடிக்கவில்லை. இருவரும் பிரிய நபியவர்களிடம் அனுமதி வேண்டினார்கள். நபியவர்கள் இருவரும் சேர்ந்து வாழும்படி ஆலோசனை வழங்கினார்கள். என்றாலும் சிறிது காலத்திலே ஸைத் (ரலி) அவர்கள் அன்னையவர்களை விவாகரத்துச் செய்துவிட்டார்கள். நபியவர்கள் அன்னையவர்களை மணமுடிக்க விரும்பினார்கள். ஆனாலும் அக்காலத்தில் வளர்ப்புமகனை சொந்த மகனைப்போன்று பார்க்கும் வழமை இருந்தது. இவ்வாறு திருமணம் செய்தால் முஹம்மத் தனது வளர்ப்புமகனின் மனைவியையே விவாகஞ்செய்துவிட்டார்கள் என மக்கள் தன்னைப் பழிப்பார்கள் என்று அஞ்சினார்கள்.
அல்லாஹ் இந்நம்பிக்கையை மாற்ற முடிவெடுத்து நபியவர்களுக்கு அவர்களை மணந்து கொள்ளுமாறு கட்டளையிட்டான். அன்னையவர்களின் இத்தா முடிந்ததும் அவர்களிடம் விருப்பம் கேட்டனுப்பினார்கள். அல்லாஹ்விடம் இஸ்திஹாரா கேட்காமல் முடிவு சொல்லமாட்டேன் என்று கூறிவிட்டார்கள். இவர்கள் சம்பந்தமாக அல்அஹ்ஸாப் எனும் அத்தியாயத்தில் வசனங்களை இறக்கியருளினான். அதனடிப்படையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்களில், தனது திருமணமானது தனது குடும்பத்தாரால் நிச்சயிக்கப்பட்டதல்ல, அது தன்னைப் படைத்த இறைவனால் நிச்சயிக்கப்பட்டு நடத்தி வைக்கப்பட்டது என்று பெருமைபட மற்ற அன்னையர்களிடம் கூறி, ஸைனப் (ரலி) அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வார்களாம்.
அன்னையவர்களின் இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில் தர்மத்திற்கு பெயர்பெற்றவர்கள் இவர்கள் என்பது நபியவர்கள் கூறிய ஒரு நபிமொழியிலிருந்து புரியலாம். உங்களில் நீண்ட கரங்களைக் கொண்டரான ஒருவரான அவர் தான் (நான் மரணமடைந்த பின்) மறுமையில் என்னைச் சந்திக்கக் கூடிய முதலாமவராக இருப்பார். அன்னையர்களிலேயே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்த பின் மரணமடைந்தவர்களில் முதலாமவராக மரணமடைந்தார்கள், இன்னும் சொர்க்கத்தின் விருந்தினராகவும் ஆனார்கள். அன்னையவர்கள் அதிகமதிகம் தான தர்மங்கள் வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவரிடம் இருந்த இந்த கொடைத்தன்மையை வைத்துத் தான் அவரை, நீண்ட கைகளை உடையவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றார்.
இத்தகைய நற்குணங்களுக்குச் சொந்தக்காரரான அன்னையவர்கள், உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தின் பொழுது, தனது 53 ம் வயதில் மரணமடைந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் முன்னின்று அன்னையவர்களுக்கு இறுதித் தொழுகை நடத்தினார்கள். அன்னையவர்களது உடல் ஜன்னத்துல் பக்கீயில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அல்லாஹ் அவர்களைப் பொருந்திக்கொள்வானாக.